நும்மைத் தொழுதோம்

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திரு இந்தளூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

நும்மைத்தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம்
இம்மைக்கின்பம் பெற்றோமெந்தா யிந்தளூரீரே !
எம்மைக்கடிதாக் கருமமருளி யாவாவென்றிரங்கி
நம்மையொருகால் காட்டி நடந்தால் நாங்களுய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)

நும்மைத் தொழுதோம் நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் ! இந்தளூரீரே !
எம்மைக் கடிதாக் கருமம் அருளி "ஆவா!" என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)

[பொருள்]

இந்தளூரில் கோயில் கொண்டிருக்கும் எங்கள் தாயே ! எங்களை ஆளும் சுவாமியாக உம்மைப் பெற்று, உமது அடியார்களாக, உமக்கான காரியங்களை மட்டும் செய்து கொண்டிருக்கிறோம். உம்மை இரு கரம் கூப்பி தொழுதோம் !  "ஆ ! ஆ ! நம்மையே கதியாகக் கொண்டிருக்கும் இவர்களுக்கு ஒரு கைங்கர்யம் அருள்வோம் ! " என்று விரைந்து  எங்களுக்கு இரங்கி,  ஏதேனும் ஒரு சேவையை ஏற்படுத்தி, உள்ளே அனுமதித்து ஒரே ஒரு முறை காட்சி அளித்தால், உம்மையே உயிராகக் கொண்டுள்ள நாங்கள் பிழைத்துப் போக மாட்டோமா ? இம்மைக்கு இன்பம் பெற்றோம் ஆவோமே.

(சொற்பொருள்)

கடிதா - விரைவாக
கருமம் - காரியம்; கைங்கர்யம்; (பகவத்/பாகவத சேவை)
ஆவா - ஆ ! + ஆ!
ஒருகால் - ஒரு முறை
 

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com